இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் இதற்கு முன்பு இருந்ததை விட வலுவாக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. இது இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலைச் சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை கொழும்பு வர உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடியின் வருகை அமைந்துள்ளது.
பிரதமர் மோடியுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கை வரவுள்ளார்.

மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நாளை (05) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த வருகை குறித்து பேசிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,, “இது மிகவும் முக்கியமான வருகை. இன்று எங்கள் உறவு ஒரு உயர் மட்டத்தில் உள்ளது. மேலும் புதிய அரசாங்கத்தின் கீழ் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு விருந்தினராக வருகிறார்.
கடந்த ஆண்டு, டிசம்பரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு இலக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். எனவே, இது மிக மிக முக்கியமான வருகை. தற்போதுள்ள புரிதல்களை முன்னெடுத்துச் செல்வதையும், உறவுகளில் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலைச் சேர்ப்பதையும் நாங்கள் அடிப்படையில் பார்க்கிறோம்” என்றார்.
இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைப் பற்றி கூறிய இந்திய தூதர், “நாங்கள் மிகவும் பரந்த அளவிலான நிகழ்ச்சி நிரலைப் பார்க்கிறோம். ஜனாதிபதி திசாநாயக்க டெல்லிக்கு விஜயம் செய்தபோது, பிரதமர் எங்கள் கூட்டாண்மையின் மூன்று தூண்களை எடுத்துரைத்தார். நில இணைப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்.
இந்தத் துறைகளில் ஒப்பந்தங்கள் உள்ளன. சுகாதாரத் துறையிலும் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

