சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்தன் பயன் என்ன? சஜித் கேள்வி

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்வும் இன்று இல்லை. குண்டர்கள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்களின் பிடியில் சமூகம் சிக்கியுள்ளது. மிருகத்தனமும் வன்முறையும் பரவியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு குறித்து டியுஷன் வகுப்புகள் எடுக்கிறோம் வாருங்கள் என கூறி பெருமையடித்த இந்த அரசு, இன்று பாதுகாப்பு குறித்து டியுஷன் வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. சமகாலத்தில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கொலைகள், உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வீடுகள், வீதிகள், பணியிடங்கள் பாதுகாப்பற்று காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மாவத்தகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பத்திரம் வாக்குறுதிகளை மீறும் நாடகமாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள், எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணம், VAT, மற்றும் பிற வரிகளைக் குறைப்பதாக வாக்குறுதி வழங்கினர். அந்த வாக்குறுதிகள் இன்னும் சரியாக நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆளுந்தரப்பினர் ஒலிவாங்கியை எடுத்துக்கொண்டு பச்சப் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி, அவஸ்தைப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வரவு செலவு திட்டத்தில் கூட இல்லாத விடயங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பொய்களைக் கூறி நாட்டை ஏமாற்றும் இந்த கையாலாகாத அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *