குழந்தை நலமாக இருக்கிறது…!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒன்றான ஆறு மாத குழந்தை தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக பேராதனை போதனா மருத்துவமனையின் இயக்குநர் ஏ.எம்.எஸ் வீரபண்டார தெரிவித்தார்.

கம்பளை மருத்துவமனையில் இருந்து ஆறு மாத குழந்தை, ஆறு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூவரில் 6 மாதக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (11) மதியம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மேலும் குழந்தையின் முதுகெலும்பு, சிறுநீர் பாதை மற்றும் மார்பு குழிக்கு அருகில் அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் என்றும், ஆறு மாதக் குழந்தை பேருந்து விபத்தில் இறந்த தாயின் மடியில் சிக்கியிருந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் கூறுகிறார்.

இதற்கிடையில், இந்த பேருந்து விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *