பதுளையில் பதட்டத்தை ஏற்படுத்திய வாள்வெட்டு

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல் வரை சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று (20ஆம் திகதி) மாலை சகோதரர் ஒருவர் தனது தம்பி மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி பாரிய காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது உடல் முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“நீ அருகில் வந்தால், உன்னை வெட்டுவேன்” என்று வாள் வெட்டை நடத்தி குறித்த சகோதரர் சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்றவர்களை அச்சுறும் வகையில் கத்திக் கொண்டிருந்ததால் எவரும் குறித்த நபரை நெருங்க அஞ்சியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பதுளை பொலிஸின் சார்ஜென்ட் நிலந்த அவரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *