யாழ்.செம்மணி புதைகுழி – சர்வதேச விசாரணையை கோரும் கனேடிய எம்.பி விஜய் தணிகாசலம்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருந்தார்.

செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருப்பதை உணர்த்துவதாகவும், அம்மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்ததியிருந்தார்.

அதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின்போது குழந்தை உட்பட 3 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன் உறுப்பினர் விஜய் தணிகாசலம்,

ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் ஸ்காபரோ-ரக்பார்க் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வலியுறுத்தலை தானும் மீளவலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘உயர்ஸ்தானிகரின் செம்மணி மனிதப்புதைகுழி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *